மகாமுனி திரைவிமர்சனம்

‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு லவ் சம்மந்தப்பட்ட கதைகளில் நடித்து வந்த ஆர்யா தற்போது திரில்லர், சஸ்பென்ஸ் உள்ள மகாமுனியாக வந்திருக்கிறார். மகா முனியின் திரைவிமர்சனத்தை பார்ப்போம்.

கதை
நடிகர் ஆர்யா மகா, முனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறுவயதிலிருந்து தாய், தந்தை ஆதரவில்லாமல் இருவரும் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள். இதில் முனி ஆர்யாவை ரோஹினி தத்தெடுத்து வளர்த்து வளர்க்கிறார். அமைதி, படிப்பு என யார் வம்புக்கும் போகாமலிருப்பார். முக்கியமாக அவர் மீது அதே ஊரில் உள்ள செல்வந்தர் மகளான மஹிமா நம்பியாருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதனால் முனியை தாழ்த்தப்பட்டவராக கருதி கொலை செய்ய சதி நடக்கிறது. அதே போல மகாவாக இருக்கும் இன்னோரு ஆர்யா ஒரு அரசியல்வாதியிடம் உதவியாளராக இருக்கிறார். இவருக்கு மனைவியாக இந்துஜா மற்றும் ஒரு மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் மகா அடியாளாக கொலை செய்யும் வேலைக்கு கூலிப்படையாக ஏவப்படுகிறார். இதற்கிடையில் ஒரு சில விசயத்திற்காக மகாவை கொல்ல பெரிய திட்டம் போடப்படுகிறது. இறுதியில் என்ன ஆனது? ஆபத்திலலிருந்து மகா தப்பித்தாரா? அவரை ஏன் கொலை செய்ய முயல்கிறார்கள் அதற்கான பின்னணி என்ன? முனி ஆர்யா என்ன ஆனார் என்பதே இந்த மகாமுனி படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்
ஏற்கனவே சொன்னது போல் நான் கடவுள், அவன் இவன் படத்திற்காக பிறகு மீண்டும் அதிக ரிஸ்க் எடுத்து அவரோட நடிப்பில் வெளிவந்திருக்கிற படம்தான் இந்த மகாமுனி. என்னதான் நிறைய படங்களில் லவ் ஹீரோவாக நடித்திருந்தாலும் சீரியஸ் கதைக்களில் பயங்கரமாக பொருந்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தில் மகா, முனி என இரண்டு கெட்டப்களில் நடித்துள்ளார். கண்டிப்பாக ஆர்யா அவருக்கான கதைக்களமாகதான் இந்த மகாமுனி அமைந்திருக்கிறது. இதில் முனி ஆர்யா மனப்பக்குவம் அடைந்த நபராக நடித்திருந்தாலும் ஜாதி எப்படி உருவானது, கடவுள் பற்றிய புரிதல் இதெல்லாம் சின்ன குழந்தைக்கு கூட எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துச்சொல்லும் காட்சி அருமை.

ஹீரோயின் மகிமா நம்பியார் இதழியலுக்கு படிக்கும் பெண்ணாகவும், மாற்று சிந்தனை கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் வரும் இடங்கள் சின்ன ரோல் தான் என்றாலும் அழுத்தமான விசயத்தை பதிவு செய்கிறார். அதே போல மகா ஆர்யாவின் பின்னணியில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது கதாபாத்திரம் தெளிவாக காட்டுகிறது. மேயாத மான் இந்துஜா மகாவுக்கு ஜோடியாக வெகுளியான படிப்பறிவில்லாத கிராம பெண்ணாக உணர்வுப்பூர்வமான எதார்த்தமான நடிப்பை படம் முழுவதும் கொடுத்துள்ளார்.

இயக்குனர் சாந்த குமாரின் மௌன குரு எவ்வளவு அழமான கதையாக இருந்ததோ அதே போல் இந்த மகாமுனி கதை மிக ஆழமானது. படத்தில் வரும் கதாபத்திரங்கள் அனைவரையயிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். தமனின் இசை படத்தின் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றது என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சிகளிலே நம்மை கதையோடு பயணிக்க வைக்கிறார். அதே போல ஒளிப்பதிவு, எடிட்டிங் என இரண்டும் படத்திற்கு கச்சிதமான காட்சிகள் வைத்து படத்தை மேலும் மெருகேற்றி உள்ளனர்.

மொத்தத்தில் மகாமுனி ஒரு சீரியஸான கதைப்பயணம் கொண்ட சிறப்பான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *