தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் கால்ஷிட் விட தற்போது யோகிபாபு கால்ஷிட் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு இயக்குனர்கள் வந்துவிட்டார்கள். அந்த வகையில் யோகிபாபுவை வைத்து வெளிவந்திருக்கும் படம்தான் ஜாம்பி.
கதைக்களம்
தமிழ் சினிமாவில் ஜாம்பி படம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மிருதன். அந்த படத்திற்கு ரசிகர்களிடம் கொஞ்சம் வரவேற்பு கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது காமெடி வடிவில் வெளிவந்துள்ள படம்தான் ஜாம்பி.படத்தின் தொடக்கத்தில் கோழி மூலம் பயங்கரமான காட்சியை வைத்தாலும் அடுத்து பரிதாபங்கள் கோபி,சுதாகர்க்கும் பொண்டாட்டி கொடுமை, மாமியார் கொடுமை, இருக்க இன்னோரு பக்கம் அன்பரசனுக்கு அப்பா டார்ச்சர் இருப்பதால் ஒயின் ஷாப்க்கு சரக்கு அடிக்க அவருடன் இன்னொருவரும் நண்பராக சந்தோசமாக சரக்கு அடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஒயின் ஷாப்பில் சண்டை வர அங்கிருந்து எஸ்கேப் ஆகி அவர்கள் ஒரு ரெசார்ட் செல்கிறார்கள். அவர்களை தொடர்ந்து கல்லூரி சுற்றுலாவாக யாஷிகா ஆனந்தும் அந்த ரெசார்ட்க்கு வருகிறார். இரவு முடிந்து காலையில் பார்க்கும் அந்த ரெசார்டில் உள்ள அனைவரும் ஜாம்பியாக மாறுகின்றனர். அவர்களிடமிருந்து இவர்கள் எப்படி எஸ்கேப் ஆனார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பொதுவாக ஜாம்பி படம் என்றாலே ஒரு வகையான பயம் இருந்தே ஆகா வேண்டும். ஆனால், இயக்குனர் புவன் நல்லான் காமெடி நடிகர்கள் முழுக்க நடிக்க வைத்து கதை எந்த போக்கில் போகிறது என்று தெரியாமல் பயங்கரமான ‘ஜாம்பி’ என்ற ஒன்றையும் காமெடியாகிவிட்டார். படத்தில் உள்ள காமெடி கூட அந்தளவுக்கு சுவாரசியமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இந்த படத்தில் நடித்த கோபி, சுதாகரின் பரிதாபங்கள் வீடியோவை கூட நாள் முழுவதும் பார்த்து விடலாம் போல ஆனால், இந்த படத்தில் அவர்கள் காமெடியிலும் சரி, நடிப்பிலும் சரி நம்மை சோதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இனி படத்தில் நடித்தால் கவனமாக தேர்ந்தெடுங்கள் சோபி, சுதாகர் அவர்களே.
படத்தின் பல காட்சிகள் எந்த இடத்திலும் கண்டினியூட்டி இல்லை, படத்தில் படித்தவர்களுக்கு என்ன தொடர்பு என்றும் அதை விட காமெடி படம் என்பதால் லாஜிக் துளியும் இல்லை என்பதே கவலைக்குரிய விஷயம். படத்தில் மற்றவர்களை விட யோகிபாபுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும் என்றால் அதுவும் சரியாக அமையவில்லை. குறிப்பாக யோகிபாபுவிற்கும், ஜான் விஜயும் எதனால் எதிரியாக இருக்கிறார்கள், யோகி பாபுவின் போனில் என்ன உள்ளது என இன்னும் படத்தில் பல இடங்களில் விடை கிடைக்கவில்லை.
படத்தில் பல கதாபாத்திரங்கள் எதற்கு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. மொத்தத்தில் திகில் இல்லாத படம்தான் இந்த ஜாம்பி.