‘கஜினி’ பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்: புற்றுநோயால் 74 வயதில் உயிர் பிரிந்தது
இந்தியத் திரையுலகின் முன்னணி வில்லன் நடிகரும், ‘கஜினி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றவருமான நடிகர் பிரதீப் ராவத் (Pradeep Rawat) ஆகஸ்ட் 4 அன்று புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் (Blood Cancer) பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில், அண்மையில் மீண்டும் நோய் தீவிரமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் அவரது உயிர் பிரிந்தது.

திரையுலகப் பயணம் மற்றும் அழிக்க முடியாத கதாபாத்திரங்கள்
பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘அஸ்வத்தாமன்’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றார் பிரதீப் ராவத்.
அதன்பின் திரையுலகில் நுழைந்த அவர், அமீர் கானின் ஆஸ்கர் பரிந்துரை பெற்ற ‘லகான்’ திரைப்படத்தில் ‘தேவா’ என்ற சீக்கிய சிப்பாய் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
‘கஜினி’ தந்த அசுர வளர்ச்சி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கஜினி’ (2005) திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை உரைய வைத்தார். அவரது மிரட்டலான தோற்றமும் நடிப்பும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்தது.

இதே படம் இந்தியில் அமீர் கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டபோதும், பிரதீப் ராவதே அதே ‘கஜினி’ கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் மிகப்பெரிய வில்லன் நடிகராக முத்திரை பதித்தார்.
தெலுங்கில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘சை’ (Sye) திரைப்படத்தில் ‘பிக்ஷு யாதவ்’ என்ற வில்லன் கதாபாத்திரத்திலும், தமிழில் ‘வீரம்’ போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார்.

































