தம்பி ராமையாவை மீண்டும் டைரக்சனில் இறங்கவைத்த ‘ராஜா கிளி’

‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’ என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார்.

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிப்பும் அதேசமயம் தமிழ் வசனங்களை அழகாக உச்சரிக்க தெரிந்த நடிகையும் இந்தப் படத்திற்கு தேவை என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பல பெண்களில் இருந்து மிகப் பொருத்தமான தேர்வாக இந்தப் படத்திற்குள் சுவேடா ஷ்ரிம்ப்டன் நுழைந்துள்ளார்.

மேலும் முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், பழ. கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.G, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ முதல், சமீபத்தில் வெளியான ‘யானை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய கோபிநாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்..

‘மாநாடு’ என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள உமேஷ் ஜே. குமார் கலை வடிவமைப்பு செய்கிறார்.

இசையமைப்பாளர் தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ் இசையமைக்கிறார்.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒத்த செருப்பு’ ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய படத்தொகுப்பை ஆர். சுதர்சன் மேற்கொள்கிறார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி இந்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் தம்பி ராமையா கூறும்போது, “இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குநரும் கூட.

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர்.

கிட்டத்தட்ட 12 இயக்குநர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி.

பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.

இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகிறது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும்.

எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்” என்கிறார்.

“இந்தப் படம் 50 சதவீதம் கதை, 50 சதவீதம் நடிப்பு என சரிவிகித கலவையாக உருவாகியுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அப்படியே பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆக உருவாகியுள்ள இந்தக் கதையை யாராவது படமாக்கத் தூக்கிக் கொண்டு ஓடினால், இதைப் படித்தவுடன் அதைவிட அதிகமான வேகத்தில் கொண்டு வந்து எடுத்து இடத்திலேயே வைத்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு கதையையும், நடிப்பையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்தக் கதை உருவாகியுள்ளது.”

தொழில்நுட்பக் குழுவினர்
தயாரிப்பு ; சுரேஷ் காமாட்சி
இயக்கம் ; தம்பி ராமையா
இசை ; தினேஷ்
ஒளிப்பதிவு ; கோபிநாத்
படத்தொகுப்பு;
R. சுதர்ஷன்
கலை ; உமேஷ் ஜே குமார்
சண்டை பயிற்சி ; ஸ்டண்ட் சில்வா
நடனம் ; சாண்டி
ஆடை வடிவமைப்பு ; நவதேவி
தயாரிப்பு மேற்பார்வை ; ஜெகதீஷ் ஜெகன், பிரவின்.G, Ksk செல்வா மற்றும் மாலிக்
மக்கள் தொடர்பு ; A.ஜான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *