சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை’ எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கினர்.

மேலும் போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை மாநகராட்சியின் உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன் போது சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் கூடுதல் ஆணையர் திரு. லோகநாதன், சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் ஆர். வி. ரம்யா பாரதி, சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திருமதி. திஷா மிட்டல், சென்னை கிழக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திரு ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் திரு. சகாதேவன், மயிலாப்பூர் காவல்துறை உதவி ஆணையர் திரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். இவர்களுடன் கல்லூரி மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக பாடல்கள் , மைம் எனப்படும் கலை வடிவம், சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கார்த்தி பேசியதாவது:
”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்”
இவ்வாறு கார்த்தி பேசினார்

இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் , ”
இங்கு கூடியிருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் சந்தோஷமாக ‌ செலவழித்து வருகிறீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்த சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை போதை பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது. மேலும் போதை பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம் ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’. போதை பொருளை பயன்படுத்தாமல்.. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமையாக ஈடுபட்டு சமூக நலனை காப்போம்.” என்றார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!
அடுத்த கட்டுரைவிஜய் படத்தில் அருள்நிதியுடன் இணையும் சௌந்தரராஜா