அறிமுகமே பான் இந்தியா படம் என்பதில் பெருமை தான் ; மகிழ்ச்சியில் மைக்கேல் பட நாயகி தீப்ஷிகா

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக திவ்யான்ஷா கவுசிக், வரலட்சுமி ஆகியோருடன் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்துள்ளார் நடிகை தீப்ஷிகா. இந்த படத்தில் கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக, கிளப்பில் பாடும் பாடகியாக, ஒரு அழகு பொம்மை போல் காட்சியளித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார் தீப்ஷிகா.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்து, படித்த, நம்ம ஊர் பொண்ணுதான் தீப்ஷிகா. ஆனால் தமிழில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கில் இருந்து வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. அந்த வகையில் தெலுங்கிலேயே கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் தீப்ஷிகா. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வருகின்றன.

அதன் முன்னோட்டமாகத்தான் தீப்ஷிகாவின் திரையுலக பயண எல்லையை முதல் படத்தில் இருந்தே விரிவாக்கும் விதமாக பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள மைக்கேல் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெளிச்சத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும், அடுத்தடுத்து தான் நடித்து வரும் படங்கள் குறித்தும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டுள்ளார் தீப்ஷிகா.

“மைக்கேல் திரைப்படத்தில் நான் நடித்திருந்த ஜெனிபர் கதாபாத்திரத்திற்கு திரையுலகில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இதற்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சொல்லப்போனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு பிரபல நடிகை நடிப்பதாகத்தான் இருந்தது.. கடைசி நேரத்தில் சில காரணங்களால் அவர் விலகிவிட, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி என்னை அழைத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என கேட்டார்,

இந்த கதாபாத்திரம் குறித்து அவர் கூறிய அந்த ஒன்லைன் என்னை உடனே மைக்கேல் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. காரணம் படத்தில் என்னுடைய ஜெனிபர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் மொத்த படமும் நகரும் விதமாக கதை அமைந்திருந்தது. கதை கேட்கும்போதே இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என என்னால் உணர முடிந்தது. ஒரு சின்ன கதாபாத்திரம் என்றில்லாமல் முதல் பாதி முழுவதும் ஆங்காங்கே வந்து செல்லும் விதமாகவும் கிளைமாக்ஸில் வரும் விதமாகவும் காட்சிகளை அழகாக கோர்த்திருந்தார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

அதுமட்டுமல்ல விஜய்சேதுபதி, சந்தீப் கிஷன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இந்த படத்தின் மூலம் அமைந்தது. படப்பிடிப்பில் கௌதம் மேனன் சாரை பார்க்கும்போது ஒரு முழு நேர நடிகராகவே அவர் மாறிவிட்டதை காண முடிந்தது. உடன் நடிப்பவர்களுக்கும் சரி, இயக்குநர்களுக்கும் சரி அவர் ஒரு வசதியான நடிகராகவே மாறிவிட்டார்.

விஜய்சேதுபதியுடன் எனக்கு இன்னும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தின் நீளம் கருதி அவருடன் நான் நடித்த சில காட்சிகள் இதில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. விஜய்சேதுபதி யதார்த்தமான ஒரு நடிகர். எல்லோரையுமே சமமாக மதித்து பழக கூடியவர். சிறைச்சாலை லொக்கேஷனில் காட்சிகளை படமாக்கியபோது அங்கே பின்னணியில் துணை நடிகர்களாக நின்று கொண்டிருந்தவர்களிடம் கூட தானே சென்று அந்த காட்சி பற்றி கூறி, இப்படியெல்லாம் நீங்கள் உங்கள் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என விளக்கியதை பார்க்கும்போது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

படத்தில் கதாநாயகன் சந்தீப் கிஷனுடன் நான் இணைந்து நடிக்கும் விதமாக காட்சிகள் எதுவும் இல்லை.. ஆனாலும் இந்த படக்குழுவினர் அனைவருமே ஒரு நட்பு வட்டத்தில் இணைந்து பணியாற்றியதால் தனக்கான காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பை கவனிப்பதற்காக வந்து விடுவார் சந்தீப் கிஷன். படத்தில் அவரது சிறு வயது கதாபாத்திரத்திற்கு நான் அம்மாவாக நடித்திருந்தாலும், எந்த இடத்திலும் ஒரு அம்மா கதாபாத்திரம் என்பது போல காட்டாமல் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தையே இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி முன்னிறுத்தி இருந்தார்.

இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது என்னுடைய கதாபாத்திரம் இந்த அளவிற்கு பேசப்படும் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்துவிட்டு பலரும் பாராட்டினார்கள். அதேசமயம் ஒரு சிலர் இந்த படத்தில் கே ஜி எப் பட சாயல் தெரிகிறது என்றும் கூறினார்கள்.. இந்த படத்தின் அறிமுக ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். படப்பிடிப்பின்போது அவரை நான் பிரபல ஒளிப்பதிவாளர் என்றே நினைத்தேன். அந்த அளவுக்கு பிரமிக்க வைக்கும் விதமாக இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது ஒளிப்பதிவும் கூட கே ஜி எப் படம் போன்ற ஒரு உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கலாம்.

தற்போது தெலுங்கில் ‘உத்வேகம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம். அது மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட.. பொது பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றிற்கு சட்டரீதியாக போராடும் ஒரு வலுவான கதாபாத்திரம். படத்தின் கதாநாயகனாக அருண் ஆதித்யா நடித்துள்ளார் அவருக்கும் கூட வழக்கறிஞர் கதாபாத்திரம் தான்.. எங்கள் இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.

அடுத்ததாக தெலுங்கில் நான் நடித்துள்ள ராவண கல்யாணம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் மாதவ் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்ல தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் ரவிதேஜாவின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்து விட்டேன்.

தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இருந்து என்னைத்தேடி பட வாய்ப்புகள் வருவதால் தற்போதைக்கு தெலுங்கில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறேன். தமிழிலும் நான் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

தெலுங்கில் ஒரு பான் இந்தியா படத்தில் அறிமுகமானது சந்தோசம் தான்.. அடுத்த படமும் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்னும் உற்சாகமாக எனது பயணத்தை தொடர்கிறேன்” என்கிறார் தீப்ஷிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *