ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார்.

கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி ‘அஸ்திரம்’ படத்திற்கு இசையமைக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை 2’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,

‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இப்படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி நடிகர்கள் கிச்சா சுதீப், ஆர்யா, சாயேஷா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் வெளியிட்டனர்.

கடந்த பத்து வருடங்களாக குறும்படங்களில் நடித்து, பின்னர் ‘என் பெயர் ஆனந்தன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

படம் குறித்து இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூறும்போது,

“கொரோனா காலகட்டத்தில் 30 நிமிடம் கொண்ட ஒரு பைலட் ஃபிலிம் ஆக இதை உருவாக்கும் வேலைகளில் இறங்கினோம். கதை நன்றாக இருக்கவே இதை திரைப்படமாக மாற்ற முடிவு செய்தோம். இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர் ஷாம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ பாணியில் இந்தப் படமும் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை சொல்வதற்காக நடிகர் ஷாமை சோசியல் மீடியா மூலமாக மெசேஜ் அனுப்பி தொடர்பு கொண்டேன். என்னை யார் என்றே தெரியாத நிலையில் என்னுடைய பேச்சிலேயே நம்பிக்கை வைத்து என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்து கதை கேட்டு உடனேயே நடிப்பதற்கும் சம்மதமும் தெரிவித்தார்.

தனக்கு இந்த படம் வெற்றிகரமான ரீ எண்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என அவர் நம்புவதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

கொடைக்கானல் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

நடிகர்கள் ஆர்யா, சுதீப், சாயேஷா, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி உள்ளிட்ட பலர் நடிகர் ஷாம் மீது கொண்ட நட்பின் காரணமாக இன்று (பிப்-4) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டனர். இவர்களுடன் இணைந்து, இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் மீது கொண்ட நட்பினால் நாற்பதுக்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் தங்கள் அஸ்திரத்தின் முதல் பார்வையை தங்கள் வலைத்தளங்களில் பதிவுசெய்துள்ளனர்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *