கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது கருமேகங்கள் கலைகின்றன எனும் படத்தை இயக்கியுள்ளார். ரியோட்டா மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா,இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீ. லெனின் படத்தொகுப்புடன் ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது.
வைரமுத்து எழுதிய இந்தப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தப்படத்தின் திரை முன்னோட்டமான டிரைலரை நீதியரசர் சந்துரு அவர்களின் இல்லத்தில்
வெளியிட்டு தங்கர் பச்சானை வாழ்த்தினார்.

ஜெய்பீம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் நீதியரசர் சந்துரு அவர்களின் புகழை தமிழக மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டு காட்டியது.

ஒய்வு பெற்ற பின்னும் கூடதமிழக அரசு அமைத்த மூன்று ஆணையங்களில் ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தனது சொந்த செலவிலேயே பணியாற்றி வருகிறார்.

அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூலகத்திற்கு 5000க்கும் மேற்பட்ட சட்ட நுணுக்கங்கள் நிறைந்த புத்தகங்களையும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் அருங்கொடையாக வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவரைப்போன்ற ஒரு நேர்மையான நீதியரசரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இந்தப்படத்தின் டிரைலரை நீதியரசர் சந்துருவை கொண்டு வெளியிட்டால் வெகு பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் தங்கர் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரும்பினர். அதனை ஏற்றுக்கொண்டு இந்தப்படத்தின் டிரைலரை அவர் வெளியிட்டார். செப்டம்பர் ஒன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *