பள்ளி பருவ காதலை கொண்டாடும் “நினைவெல்லாம் நீயடா” !

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.

முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, சிம்பு நடித்த “மாநாடு” படத்தை தயாரித்த பட அதிபர் சுரேஷ் காமாட்சி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“படிக்கிற வயதில் பள்ளி பாடங்களை ஒழுங்காக படிக்காதவர்கள் கூட காதல் பாடத்தை கற்று தேர்ந்திருப்பார்கள். இந்த படத்தை பார்க்கும் போது, காதலில் சிக்கி காலச் சுனாமியில் கரை ஒதுங்கிய ஒருவனின் டைரியை வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படும். நாம் படித்த பள்ளிக் கூடத்திற்கு மீண்டும் ஒருமுறை சென்று கடந்த கால நினைவுகளில் நிகழ்காலத்தை தொலைத்து விட்டு வரத்தோன்றும். இளம் வயது நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவலட்சுமியும், அபிநய நட்சத்திரா, தண்டபாணி ஆகியோரும் இயல்பான நடிப்பில் பள்ளி மாணவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இந்தப் படம் கதாநாயகன் பிரஜன் கதாநாயகி மனிஷா யாதவ் புது நாயகி சினாமிகா ஆகியோரின் நடிப்பாற்றலுக்கு தீனி போட்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
“நினைவெல்லாம் நீயடா’ இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி” என்று தெரிவித்தார் இயக்குநர் ஆதிராஜன்.

இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *