ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த ஆண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் உற்சாக வரவேற்பை அடுத்து, தற்போது ஆர்ஜே. விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் மற்றொரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எஸ். அம்பேத்குமார். ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 12, 2023) ஒரு பூஜையுடன் தொடங்கியது.

கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மோதல்கள்தான் படத்தின் ஒன்லைன். பல கனவுகள் கொண்ட ஒருவன் குடும்பத்திற்காக தனது கனவுகளை தியாகம் செய்து, நல்ல கணவனாக வாழ்வில் வெற்றியடைகிறான். பல கேரக்டர்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஆர்ஜே.விஜய் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆர்ஜே.விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ​​மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சிவசங்கர் இப்படத்தின் கலை இயக்குநர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *