நாகேஷ்.(இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன் (செப்டம்பர் 27, 1933 – சனவரி 31, 2009) தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச் சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
பெற்ற விருதுகள்
கலைமாமணி விருது (1974)
சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது – நம்மவர் (1994)
தமிழ்நாடு மாநில திரைப்பட விருது – சிறப்பு பரிசு – நம்மவர் (1994)
பக்கம் பக்கமாக எழுத வேண்டிய சாதனை நடிகர் திரு.நாகேஷ் குறித்து சில பக்கங்கள் ,தொகுப்பாக…
பொறுத்தருள்க – என்.ஏகம்பவாணன்
நாகேஷ் குறித்து…
வசன உச்சரிப்பு ஒரு நடிகருக்கு மிக அவசியம். முக பாவனைகள் மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனும் உடல்மொழி ரொம்பவே அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள்… கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான உன்னதக் கலைஞன்… நாகேஷ்.
ஒல்லியான தேகம்தான். வேலை பார்த்துக் கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடுதல்… என தொடர்ந்த முயற்சிகளும் முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் நாடகத்தில் அங்கே ஒன்று இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன.
கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பாராம் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. வாலியிடம் இருந்தால் அது நாகேஷின் பணம்.
சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத் தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கினார். நாடகங்களில் வாய்ப்பு தந்த பாலசந்தர், திரைத்துறையிலும் பயன்படுத்தினார். தன் முதல்படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் தான் நாயகன். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் நடிப்பைக் கண்டு திரையுலகமே வியந்து மிரண்டது.
இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார்