‘ரன் பேபி ரன்’ படத்தை பற்றி இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்

ரன் பேபி ரன்

‘சர்தார்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மண்குமார்
தயாரிக்கும் படம் ‘ரன் பேபி ரன்’.

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும்
இந்தப் படத்தை
பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர்
ஜியென் கிருஷ்ணகுமார் கூறியதாவது :

“தமிழ் சினிமா எனக்கு பிடிக்கும். டெக்னீக்கலாக இரு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ் கலாச்சாரம், பண்பாடுகள் எனக்கு பிடிக்கும் என்பதோடு அந்த கலாச்சாரம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக ‘ரன் பேபி ரன்’ படம் அமைந்தது.

மலையாளப் படம்பண்ணும் போது இருந்த சுதந்திரம் தமிழிலும் கிடைத்தது.

இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் தயாரிப்பாளர் எஸ்.லக்‌ஷ்மண்குமார் சார் தான்.

மலையாளத்தில் எனது இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்து வெளியான ‘தியான்’ 25 கோடி படஜெட்டில் உருவாகி பெரிய வெற்றி அடைந்தது.

தமிழில் படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.

அதுமட்டுமல்ல, ஒரு படைப்பாளி யாக தமிழில் படம் பண்ணும்போது அதன் வரவேற்பு அதிகம்.

தமிழுக்குப் பொருத்தமான கதையும் என்னிடம் இருந்தது.

நான் இயக்கிய ‘தியான்’ படமும் எனக்கான வாய்ப்பை எளிதாக்கியது.

‘ரன் பேபி ரன்’ என்ற டைட்டில் கதைக்கு நூறு சதவீதம் பொருந்திப் போகுமளவுக்கு இருக்கும்.

இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த கதை என்பதால் கதையை முழுமையாக சொல்ல முடியாது.

ஆனால் ஹீரோவை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது. படம் பார்க்கும் ரசிகர்கள் இந்த மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்த மாதிரி இருக்கும்.

ஏன் என்றால் படத்தில் ஹீரோவுக்கு நடக்கிற மாதரியான சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அல்லது நடக்கலாம்.

அந்த மாதிரி பிரச்னை வரும்போது பாதிக்கப்பட்டவர்களால் வாழ முடிகிறததா அல்லது விதி என்று அப்படியே விட்டுவிடுகிறார்களா என்பதை ரசிக்கும்படியாக சொல்வதுதான் ‘ரன் பேபி ரன் ‘.

எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அல்லது உடல் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்னைகளோடு போராட்டம் இருக்கும். அந்த போராட்டத்தில் சிலருக்கு வெற்றி கிடைக்கலாம் சிலருக்கு தோல்வி கிடைக்கலாம் என்பதை விறுவிறுப்பாக சொல்லி உள்ளோம்.

கதை எழுதும்போதே ஆர்.ஜே.பாலாஜி என்னுடைய முதல் சாய்ஸாக இருந்தார். ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் எனக்கு பிடிக்கும்.

ஆர்.ஜே.பாலாஜி இதுவரை பண்ணிய படங்கள் எல்லாமே காமெடி படங்கள். இதில் பழைய சாயல் ஏதுவும் இல்லாதளவுக்கு அவருடைய கேரக்டர் புதுசாக இருக்கும்.
ஆர்.ஜே.பாலாஜி முதல் முறையாக த்ரில்லர் கதையில் நடித்துள்ளார்.

படத்தில் காமெடி இருக்கும். ஆனால் ஆர். ஜே. பாலாஜிக்கு காமெடி இருக்காது. காமெடி பண்ற சூழ்நிலையிலும் அவர் இருக்கமாட்டார்.

ஆர்.ஜே.பாலாஜியிடம் கதை சொன்னதுமே அவர் மிகவும் இம்ப்ரஸாகி உடனே சம்மதம் சொல்லிட்டார். அவருடைய கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை வழங்கினார்.

அந்த விதத்தில் புது வடிவத்தில்
ஆர். ஜே. பாலாஜி பார்க்கலாம். இவர் வங்கி அதிகாரி கேரக்டர் பண்றார்.

முக்கியமான வேடத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தமிழில் அவருடைய இடம் உயரத்தில் இருக்கிறது. கதை உருவாக்கத்திலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் வந்துவிட்டார். இது வழக்கமான ஹீரோ, ஹீரோயின் கதை இல்லை என்று தெரிந்தாலும் கேரக்டரின் முக்கியத்துவம் புரிந்து நடிக்க சம்மதித்தார்.

முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார், விவேக் பிரசன்னா, ஜார்ஜ் மரியன், ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். எல்லோருக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கும்.

இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ். கதைக்கு தேவையான இசையை வழங்கினார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார்.
யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘டெடி’, ‘கேப்டன்’ பண்ணிய கேமரா மேன். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை புரிந்து பண்ணினார்.

இந்தப் படம் ரசிகர்களால் யூகிக்க முடியாத பரபரப்பான த்ரில் அனுபவத்தைக் கொடுக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *