பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்’ படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது.

எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றி சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது வுல்ஃப் படத்தை இயக்கி வரும் வினு வெங்கடேஷ் கூறுகையில், “இப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

படத்தின் தலைப்பைப் பற்றி பேசிய வினு, “படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகன் இருவரும் ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதுதான் கதையின் கரு” என்றார்.

என். சந்தேஷ் தயாரித்துள்ள இப்படத்தை மற்றும் சந்தேஷ் நாகராஜ் வழங்குகிறார். கர்நாடகாவின் சட்ட மேலவை உறுப்பினரும், தேசிய விருது பெற்ற தயாரிப்பாளருமான சந்தேஷ் நாகராஜ், சிவ ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களை தயாரித்துள்ளார்.

வுல்ஃப் படத்தின் இசையை அம்ரேஷ் கணேஷ், ஒளிப்பதிவை அருள் வின்சென்ட், படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர், கலைத் துறையை மணிமொழியன் ராமதுரை ஆகியோர் கவனிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *