“நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக இளையராஜா எழுதிய பாடலை பாடிய யுவன்சங்கர் ராஜா!

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி முடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான “வழி நெடுக காட்டுமல்லி..” என்ற பாடலை எழுதிப் பாடிய இளையராஜா இதுவரை சுமார் 200 பாடல்களை எழுதியிருக்கிறார். தற்போது இந்த படத்திற்காக “இதயமே…. இதயமே… இதயமே‌‌…”என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி கொடுத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து ஸ்ரீஷா பகவதுல்லா பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் பல பாடல்களை பாடி இருந்தாலும் இளையராஜா எழுதிய பாடலை யுவன் பாடி இருப்பது இதுவே முதல் முறை.

” மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடலை பழநிபாரதி எழுத கார்த்திக் பாடியிருக்கிறார். “வண்ண வரைகோள்கள்….”பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார்.

“வழிநெடுக காட்டுமல்லி” பாடலை இளையராஜாவுடன் சேர்ந்து பாடி பிரபலமான பெங்களூர் பாடகி அனன்யா பட், “வச்சேன் நான் முரட்டுஆசை…” மற்றும் “அழகான இசை ஒன்று…” ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார்.
மேற்குறிப்பிட்ட மூன்று பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கின்றார். நடனக் காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது. அஜித்தின் “துணிவு”படப் பாடலை வெளியிட்ட ஜீ மியூசிக் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை வெளியிட இருக்கிறது. விரைவில் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.

பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் மற்றும் யுவலட்சுமி நடிக்கின்றனர்‌. முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *