வருதப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் பொன்ராம் அவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் சீமராஜா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்தா நடிக்கிறார். சமீபத்தில் வெளியான சீமராஜா படத்தின் ட்ரைலரில் சிவகார்த்திகேயனின் அதிரடி சண்டை காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதை தொடர்ந்து நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் “நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று சிவகார்த்திகேயன் டிரெய்லரை விமர்சிக்கும் வகையில்பதிவிடப்பட்டிருந்தது.
இந்த டுவிட்டர் பதிவு வைரலாக பரவியதை அடுத்து அருண்விஜய், “எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது” என்று இன்னொரு பதிவை பதிவிட்டு, “இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன்.
நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, இழிவு படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் நடிகர் அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.