‘சொல்லாமலே ‘ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சசி,அதன் பிறகு ‘ ரோஜாக்கூட்டம் ‘, ‘ டிஷ்யூம், ‘ பூ ‘ ‘ பிச்சைக்காரன் ‘ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவரரானார். சசி இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கான திரைவிமர்சனத்தை பார்க்கலாம்.
கதை:
‘மாமன் மச்சான் உறவு ‘, ‘ அக்கா தம்பி உறவு ‘போன்றவற்றை உருக்கமாக இப்படத்தின் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சசி. நேர்மையான போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் சித்தார்த்தும், பொறுப்பில்லாமல் பைக் ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய அக்காவாக புதுமுகம் லிஜோ மோலும் ஜிவி பிரகாஷின் காதலியாக காஷ்மீரா என இவர்களை சுற்றி தான் கதை நகருகிறது.
படத்தை பற்றிய அலசல்:
படத்தின் ஆரம்பத்திலேயே பைக் ரேஸ் ஓட்டும் ஜிவி பிரகாஷுக்கு ஆகாத மனிதராக ஆகிவிடுகிறார் சித்தார்த். அவருடைய அக்காவையே பெண் பார்க்க வரும் சித்தார்த்தை அக்காவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க ஜி.வி. பிரகாஷுக்கு விருப்பமில்லை. இதனால் தன்னுடைய எண்ணத்தை அக்காவிடமும் சொல்ல, திருமணம் நிற்கக் கூடிய சூழ்நிலை வருகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் ஜி.வி. பிரகாஷின் காதலி காஷ்மீராவின் தலையீட்டால் சித்தார்த்தை மணம் முடிக்கிறார் லிஜோமோல்.
அதன் பிறகு ஏற்படும் பிரச்சினைகளை சென்டிமென்ட்டோடு எமோஷனலாக சொல்கிறார் டைரக்டர்.. ஆனால் இடைவேளைக்குப் பிறகு வரும் வில்லன், பான்பராக்,குட்கா கடத்தல் ஆக்சன் ப்ளாக் என்று படம் வேறு பக்கம் போய் மீண்டும் கதைக்கு திரும்புகிறது. குறிப்பாக படத்தில் ஹெவி ஆக்ஷ்ன் இல்லாமலே பண்ணியிருந்தால் இந்த படம் பார்க்கும் நமக்கு இன்னும் நிறைவாக இருந்திருக்கும். கமர்சியல் என்று நினைத்து ஓவர் டோஸ் ஆக்ஷ்ன் பண்ணியதால் படத்தின் கலர் அங்கங்கே மாறுகிறது.
படத்தினுடைய இறுதி அரைமணிநேரத்தை தவிர்த்து பார்த்தால் இப்படம் தரமானது என்றே சொல்லவேண்டும். அதில் அனாவசியமாக படுபயங்கர சண்டைக்காட்சிகளை நுழைத்து படத்தின் தரம் குறைந்துவிட்டதோ என்றே தோன்ற வைக்கின்றது.சித்தார்த், ஜி.வி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளனர். சித்தார்த் ஜோடியாகவும் ஜி.வி. பிரகாஷ் அக்காவும் நடித்துள்ள லிஜோ மோல் அருமையான புதுமுக வரவு. சினேகாவை போல் அழகான கலையான முகம் இவருக்கு இருப்பதால் கவனமாக படங்களை தேர்ந்தெடுத்தால் குறிப்பிடத்தகுந்த இடத்திற்கு வரலாம்.
இன்னொரு நாயகி காஷ்மீரா அழகுப் பதுமை…ஓ.கே.
அத்தையாக நடித்துள்ள தனம் அம்மாள், தீபா ராமானுஜம், வில்லன் மதுசூதனன், பிரேம் போன்றவர்கள் நிறைவான கேரக்டர்ஸ்.’ பிச்சைக்காரன் ‘ படத்தில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பொருளாதாரம் பேசும் பிச்சைக்காரனாக நடித்திருந்த மூர்த்தி இந்தப் படத்திலும் நல்ல இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார்..’ என் வேலைக்கு வேட்டு வச்சிடாதடா ‘ என்று அவர் புலம்புவது செம்மா.
ஸ்டேட்டஸ் படி பார்த்தால் லிஜோமோலை சித்தார்த் பெண் பார்க்க வரும் அவசியம் படத்தில் சொல்லப்படவில்லை. அத்தையை சாகடிப்பது, அவர் வைத்திருந்த பரிசுப் பொருட்களை கொடுப்பதற்காகவே திணிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது. மாடியில் காயப்போடும் துணியில் சித்தார்த் சட்டையும் ஜி.வி. பிரகாஷின் சட்டையும் தோள்மீது கை போட்டிருப்பதுப் போல லிஜோமோல் விருப்பத்தை வெளிப்படுத்துவது டைரக்ஷ்ன் டச். ரேஸ் போவதை கடுமையாக எதிர்க்கும் டிராபிக் போலீஸ் சித்தார்த்,தனது மைத்துனர் ஜி.வி.பிரகாஷ் இறுதியில் கட்டாயத்திற்காக அவரே ரேஸ் போக அனுமதிப்பது எந்த வகையில் நியாயம். பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு ரேஸ் காட்சிகளில் குறிப்பாக ஓடியாடி உழைத்து இருக்கிறது. அருமை. சித்து குமாரின் இசை, சான் லோகேஷின் எடிட்டிங்கில் படத்தை தயாரித்து இருப்பவர் ரமேஷ் பிள்ளை.
மொத்தத்தில் டைரக்டர் சசியின் முந்தையப் படமான ‘ பிச்சைக்காரன் ‘முழுநிறைவான படமாக இருந்தது. அது இந்த படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்…