‘வீரன்’ படத்தில் நடிகர் சசி செல்வராஜ்ஜின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘வீரன்’ திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜ்ஜின் நடிப்பு பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். “நான் 2016இல் யூடியூபராக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், அந்த ஆர்வத்தை நான் கைவிட விரும்பவில்லை. எனது யூடியூப் சேனல் அப்படித்தான் தொடங்கியது. கண்டெண்ட் கிரியேஷன் செய்து வந்ததால் ஒன்றிரண்டு குறும்படங்களிலும் வேலை செய்தேன். இதன் மூலம் ட்ரீம் வாரியரின் ‘வட்டம்’ படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்தேன். இருப்பினும், கொரோனா காரணமாக காத்திருப்பு மற்றும் தாமதம் ஏற்பட்டது. பின்பு, லாக்டவுன்கள் நீக்கப்பட்டவுடன், ஆஹாவில் ‘அம்முச்சி 2’ இல் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த சமயத்தில்தான் எனக்கு ‘வீரன்’ படத்துக்கு அழைப்பு வந்தது,” என்று சசி பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் குழுவிடமிருந்து அழைப்பைப் பெற்றதையும், தனது ஆடிஷன் அனுபவத்தையும் நடிகர் சசி விவரித்தார். அவர் கூறுகையில், “ஆடிஷனில் எனது நடிப்புப் பிடித்துப் போய் சரவன் சார் என்னை அழைத்தார். ஆரம்பத்தில், தொலைபேசியில் கதையைக் கேட்டபோது, ​​​​படத்தின் நுணுக்கமான தன்மையால் நான் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும், சரவன் என்னை நேரில் சந்திக்கச் சொன்னார். அப்போதுதான் நான் படத்தைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்றேன். எனது சக்கரை கதாபாத்திரம் உடனடியாக பிடித்து விட்டது. எங்கள் சந்திப்பின் போது, ​​இயக்குநரும் நானும் ஒன்றிரண்டு காட்சிகளில் வேலை செய்தோம்”.

அவரது கதாபாத்திரத்தைப் பற்றி சசி விரிவாகக் கூறுகிறார், “ஹீரோவின் நண்பன் என்பதையும் தாண்டிய ஒரு கதாபாத்திரம்தான் சக்கரை. அவன் பெயருக்கு ஏற்றபடி ஒரு இனிமையான பையன். குமரன், செல்வி மற்றும் சக்கரை கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்குள்ளான பிணைப்பு மற்றும் அவை எவ்வாறு கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன என்றபடி படம் தொடங்கும்”

சசி தனது பாத்திரத்தை முழுமையாக்க அவர் மேற்கொண்ட விரிவான தயாரிப்பைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “சக்கரை தனது ஊரில் சலூன் வைத்திருப்பதால், உள்ளூர் நகர பையனின் உடல் மொழியை துல்லியமாக படம் பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இயக்குநர் வலியுறுத்தினார். எனது நடிப்பு பொருத்தமாகவும் யதார்த்தமாகவும் இருப்பதை உறுதி செய்ய கிராமப்புற சலூன்களில் பணிபுரியும் நபர்களின் உடல்மொழியை கவனித்து அதுபோல நான் நிறைய முயற்சி செய்தேன். வசனங்களையும் படப்பிடிப்பிற்கு முன்பே நான் தெளிவாக ரிகர்சல் செய்து விடுவேன்”.

அதிர்ஷ்டவசமாக சசியின் யதார்த்தமான நடிப்பு பலரின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. “நான் பார்வையாளர்களுடன் சேர்ந்து தியேட்டரில் படத்தைப் பார்த்தபோது, பலர் என்னை அணுகி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் தியாகராஜன் சாருக்கு எனது நன்றி. தியாகராஜன் சார் என் நடிப்பைப் பாராட்டினார். ஆதி எனக்கு நல்ல நண்பராக இருந்து அவரது ஆதரவை கொடுத்தார். அதே நேரத்தில் சரவன் சார் அந்த பாத்திரத்தை சரியாக நான் புரிந்து கொள்வதற்கு நிறைய உதவி செய்தார். ஒரு நடிகராக அதிக பொறுப்புணர்வுடன் இருக்கிறேன் மற்றும் அதிக படங்களில் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”.

சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ‘வீரன்’ திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *