இங்கே குவிந்து கிடக்கும் ஒரு டஜன் பட்டங்களில் வேறு எந்த பட்டத்துக்கும் இத்தனை பொழிப்புரை இருக்க வாய்ப்பில்லை எனும் அளவிற்கு ஆளாளுக்கு விளக்கம் தந்தார்கள்.
ரஜினி தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவர் ரசிகர்களில் பலரே “நல்லவனா இருக்கலாம், ஆனா ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது” என உரிமையுடன் கொந்தளித்த போதும் ரஜினி அமைதியாகவே இருந்தார். “ஜெயிலர்”, “லால் ஸலாம்” என இரு படங்களில் கவனம் செலுத்தினார்; சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பொதுவெளியில் பேச கிடைத்த எந்த வாய்ப்பிலும் இந்த பட்டம் குறித்த சர்ச்சை பற்றி அவர் பேசவில்லை. மௌனம் காத்தார்.
கடந்த 48 வருடங்களாக அடுத்தடுத்த உயர் இலக்குகளை அமைத்து அவற்றை அடைவதே ரஜினியின் அணுகுமுறை. தற்போதைய அமிதாப்பச்சன் போல், இந்த வயதில் சில குணச்சித்திர வேடங்களில் நடிப்பது ரஜினிக்கு மிக எளிது. ஆனால், எத்தனை ஆண்டுகள் திரையில் இருந்தாலும் ஹீரோவாகவே நடிக்கவேண்டும் என்பது அவர் இலக்காக இருக்கிறது. 80 வயது வரை நடித்தாலும் அதுவரை ஹீரோவாக, அன்றுவரை மக்கள் தியேட்டரில் வந்து தன் படத்தை பார்க்கும் வசீகரம் மிக்க கலைஞனாக முத்திரை பதிக்கும் மைல்கல் சாதனையை அவர் உருவாக்க நினைக்கிறார். இதுதான் உயர உயர பறக்கும் கழுகின் குணத்திற்கு ஒத்த செயல்.
இப்படி “பட்டத்தை பறிக்க நூறு பேரு” துடிக்கும்போது “யார் எவ்வளவு சீண்டினாலும் மெளனம் ஏன்?” என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வகையில், “மெளனமாக இருந்து என் அடுத்த உயர் இலக்கை நோக்கி பயணிக்கிறேன்; சீண்டுபவர்கள் என் உயரத்திற்கு இணையாக உயரமுடியாமல் வீழ்ந்து போவார்கள்” என்ற தன் அணுகுமுறையை பகிர்ந்து கொள்ள ரஜினி சொன்ன கதைதான் “கழுகு – காக்கா” கதை.