நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன் – ‘மெய்ப்பட செய்’ நாயகி

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக ‘மெய்ப்பட செய்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், “’மெய்ப்பட செய்’ உண்மையை செய் என்று அர்த்தம். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகத்தான் இந்த படம் இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் பல இடங்களில் பல வகையில் பெண்கள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இது ஏன்? என்ற கேள்வியை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும்.

இது நான் தயாரித்த முதல் படம், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என அனைவருக்கும் முதல் படம். இருந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்துள்ளோம். அதே சமயம், பாடல்கள், நகைச்சுவை, காதல் காட்சிகள் என கமர்ஷியலாகவும் படம் இருக்கும். பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதை என்பதால் முகம் சுழிக்கும்படியான எந்தவித காட்சிகளும் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்க கூடிய நல்ல மெசஜ் சொல்லும் படமாக இருக்கும்.

கதாநாயகன் ஆதவ் பாலாஜி பேசுகையில், “இந்த படம் எனக்கு முதல் படம். படத்தை பற்றி இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லிவிட்டார். நான் சொல்லப் போவது, அறிமுக நடிகர்களின் படம் என்று புறக்கணிக்கிறார்கள். அது ரொம்பவே வருத்தம் அளிக்கிறது. இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அந்த உழைப்பை பார்க்காமல், நடிகர்களை வைத்து புறக்கணிப்பது சரியில்லை. படத்தை பாருங்கள் பிறகு சொல்லுங்கள்.” என்றார்.

கதாநாயகி மதுனிகா பேசுகையில், “இந்த கதை ரொம்பவே இண்டன்ஷாக இருந்தது. இதை இயக்குநர் என்னிடம் சொன்ன போது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என்றார். இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால், இந்த படம் அனைவரையும் கனெக்ட் செய்யும்.” என்றார்.

வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘மெய்ப்பட செய்’ படத்தை இவானியா பிக்சர்ஸ் மற்றும் ஃபிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *