சென்னை (ஜூலை 2, 2022): அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த பிரமாண்ட தயாரிப்பான ‘கேப்டன் மில்லர்’ படத்தினை இன்று அறிவிக்கிறது.

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் T.G. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் கூறும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும், எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நடிகர் தனுஷுடன் பணிபுரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், ஏனெனில் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.

இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும், அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள், மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்.

“கேப்டன் மில்லர்” படைப்பு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது. மேலும் சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தைப் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளுடன் வளர்த்து வருகிறது. இந்த திரைப்படம் சிறந்த முறையில் வடிவமைக்கப்படுவதை உறுதிசெய்ய, ஒரு குழு ஒரு வருடமாக, முன் தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது.

இந்த திரைப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு ஈர்க்கும் அம்சமாக இருப்பார்கள். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும். உண்மையில், இந்த திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பேனர் மதிப்புக்காக அல்லாமல், அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். பாகுபலி படங்கள், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் கேப்டன் மில்லருக்கும் கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24am(பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“பொன்னியின் செல்வன் திரைக்கு வர தயாராகி வருகிறது.
அடுத்த கட்டுரைநடிகர் விஷாலுக்கு விபத்து!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here