தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் மே மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது”, என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது கமல் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.