KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ஐரா.
படத்தின் கதைக்களம் :
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா மற்றும் பவானி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் யமுனா ஊடகத்தில் பணிபுரியும் தைரியமான பெண். தனது பாட்டி, யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து பேய் இருப்பது போல வீடியோக்களை உருவாக்கி யூ ட்யூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதனை வெளியிட்டு செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். பொய்யாக பேய் இருப்பது போல் சித்தரித்து வீடியோ போடுவதில் இருக்கும் யாமுனக்கு உண்மையான பேய் துரத்துகிறது.ஏன் அந்த பேய் துரத்துகிறது என்றும்? இன்னொரு பக்கம் கலையரசன் பவானியின் காதலனாக நடித்துள்ளார். அவருக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்மந்தம் என்பதை கொண்டதே ஐரா படத்தின் மீதி கதை.
இயக்கம் சர்ஜுன் KM:
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களின் மூலம் பேசப்பட்ட இயக்குனர் சர்ஜுன் KM எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் படத்தை தொடர்ந்து திரில்லர் கலந்த திரைக்கதையுடன் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்தை கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.
நயன்தாரா:
நயன்தாரா முதல் முறையாக இரு வேடங்கள்களில் ஏற்று அருமையாக நடித்திருத்திருக்கிறார். யமுனா கதாபாத்திரத்தைவிட பவானி கதாபாத்திரத்தை மிகவும் அழகாவும், எதார்த்தமாவும் நடித்து நம்மை கண்கலங்க வைத்த பவானி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
கலையரசன்:
குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தினர், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் என்று எல்லோராலும் கேலி கிண்டலுக்கு மட்டுமே ஆளாகி வரும் பவானிக்கு ஆதரவாக இருப்பவர் மற்றும் காதலிக்க செய்கிறார் கலையரசன் என்கிற ( அமுதன் ) . ஒரு சிறு வேடம் கொடுத்தாலும் அதை நூறு சதவிகிதம் பொருத்தமாக ஏற்று நடிக்கும் கலையரசனுக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்த அமுதன். தான் வரும் காட்சிகளில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அதிலும் பாவனிக்கும் அமுதனுக்கும் வரும் காதல் காட்சிகள், மேகதூதம் பாடலில் இருவரின் அன்பு பிரமாதம்.
யோகி பாபு:
யோகி பாபு முதல் பாதியில் மட்டுமே வந்தாலும் நம்மை அங்கங்கே சிரிக்க வைத்து சென்று விடுகிறார். ஆனால் மற்ற படங்களை ஒப்பிட்டால் இந்த படத்தில் காமெடி சற்று குறைவே.
தொழில் நுட்பம் :
இசை :
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் படம் மூலம் அறிமுகமான சுந்தரமூர்த்தி கே. எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். த்ரில்லர் கலந்த சமூக கருத்தை கொண்ட படத்திற்கு இசை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி கொடுத்துள்ளார். பின்னணி இசையில் மிகவும் மெனக்கெடுத்துள்ளது படத்தில் பார்க்க முடிகிறது. இடைவெளிக்கு பிறகு வரும் மேகதூதம் பாடல் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் என்பது உறுதி.
ஒளிப்பதிவு :
சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பயமுறுத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை பயம்புறுத்தும் வகையில் படம் பிடித்திருந்தாலும் பொள்ளாச்சின் அழகை குறையாமல் படம் பிடித்திருக்கிறார். அதே போல் இடைவேளை தாண்டி கருப்பு வெள்ளை நிறத்தில் வரும் காட்சிகள் படம் பிடித்த விதம் அழகு.
எடிட்டிங் :
கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பை கச்சிதமாக அமைந்துள்ளார். திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. நயன்தாரா மற்றும் கலையரசனின் நடிப்பு
2. படத்தின் இசை
3. ஒளிப்பதிவு
4. சமூக கருத்து
தம்ப்ஸ் டவுன் :
1. தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட கதை மற்றும் சில லாஜிக்கல் தவறுகள்
2. வேகத்தை மட்டும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்